பம்பையில் ஆராட்டுடன் சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2023 08:04
சபரிமலை, பம்பையில் நடைபெற்ற ஆராட்டுடன் சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்தர திருவிழா நிறைவு பெற்றது.
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27–ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும்வழக்கமான பூஜைகளுடன் மதியம் உற்சவ பலியும், இரவில் யானை மீது சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.நேற்று முன்தினம் இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி சரங்குத்திக்கு எழுந்தருளி பள்ளிவேட்டை முடிந்ததும் நள்ளிரவில் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளிஉறக்கம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் சுவாமி ஸ்ரீகோயிலுக்குள் எழுந்தருளினார்.
காலை 7:00 மணிக்கு உஷபூஜை முடிந்ததும் யானை மீது சுவாமி பவனி ஆராட்டுக்காக பம்பபைக்கு புறப்பட்டது. பகல் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு முடிந்த பின்னர் மாலை 3:00 மணி வரை கணபதிகோயில் சமீபம் பக்தர்கள் ஐயப்பனை வணங்கி வழிபாடு நடத்தினர். மாலை 4:00 மணிக்கு சன்னிதானத்துக்கு பவனி புறப்பட்டு செல்லும். இரவில் சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி சித்திரை விஷூ பூஜைகளுக்காக வரும் 11–ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டு 19–ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.