செஞ்சி: பாடிப்பள்ளம் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீமிதி விழா நடந்தது.
செஞ்சியை அடுத்த பாடிப்பள்ளம் பாலமுருகன் கோவிலில் 8 ம் ஆண்டு பங்குனி உத்திர விழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் நடந்தது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து வந்தனர். 4ம் தேதி மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். 10 மணிக்கு குளக்கரையில் காவடி பூஜையும், பகல் 12 மணிக்கு பலாபிஷேகமும், விபூதி காப்பும், சக்தி வேல் வீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து சரவணன் சுவாமிகள் மார்பின் மீது மாவு இடித்தல், மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. 1 மணிக்கு செடல் சுற்றுதலும், 2 மணிக்கு தீக்குண்டம் இறங்குதலும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து திருத்தேர் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமானவர்கள் வடம் பிடித்தனர்.