பரமக்குடியில் மின் அலங்கார தேரில் வலம் வந்த முத்தாலம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2023 11:04
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் அம்மன் மின் அலங்கார தேரில் வலம் வந்தார். மேலும் காலை முதல் இரவு வரை பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 28 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 ம் திருநாள் மண்டகப்படியாக குதிரை வாகனத்தில் அம்மன் அருள் பாலித்தார். நேற்று காலை 9:00 மணி தொடங்கி பல்வேறு அமைப்பினர் சார்பில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் இரவு 8:00 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன் மின் அலங்கார தேரில் எழுந்தருளினார். அப்போது தீவட்டிகள் வெளிச்சத்தில், வான வேடிக்கைகள், மேள தாளம் முழங்க, நான்கு மாட வீதிகளில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ஆடி அசைந்து வந்தது. தொடர்ந்து ஓம் சக்தி, பராசக்தி" கோசம் விண்ணை முட்டியது. ஒரு மணி நேரம் வரை தேரோட்டம் நடந்த நிலையில், மீண்டும் அம்மன் தேர் நிலையை அடைந்தார். அப்போது பக்தர்கள் அம்மனை சுமந்து ஆடி அசைந்தபடி கோயிலை அடைந்தனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிர வைசியர் சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.