பதிவு செய்த நாள்
06
ஏப்
2023
11:04
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூச திருவிழா, பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, ரத்னா அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 12:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், தங்கமயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பங்குனி உத்திரத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பால்குடம் எடுத்தும் வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக, அடிவாரத்தில் இருந்து மலைமேல் உள்ள கோவிலுக்கு, இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.