பதிவு செய்த நாள்
07
ஏப்
2023
01:04
நரிக்குடி: நரிக்குடி நாலூர் அருகே வயல்வெளிகளில் 800 ஆண்டுகள் பழமையான இடைக்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த துர்க்கை சிற்பம், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், நாகரத்தினம், அங்காளம்மாள், வரலாற்று துறை உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோரால் கண்டறியப்பட்டது.
அவர்கள் கூறியதாவது, யாமளாதேவி என்பவர் புராணங்களின் படி, தொடர்ந்து பாண்டியர்கள், பல்லவர்கள், முற்சோழர்கள் ஆட்சி காலங்களில் போரின்போது போர் தேவதையான யமளாதேவி என்ற கொற்றவைக்கு பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. யாமளாதேவி பற்றிய செய்திகள் சங்கப் பாடலான புறநானூற்றுப் பாடலில் பாடப் பெற்றுள்ளது. அத்தகைய சிறப்பை உடைய கொற்றவைக்கு கோயில்களும் குடைவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி குகையை கூறலாம். இந்த கொற்றவைக்கு மகிஷாசுரமர்த்தினி, காளியாமளாதேவி, துர்கா தேவி போன்ற பெயர்களும் உண்டு. காலப்போக்கில் கொற்றவை கோயில்களின் தேவ கோட்டங்களில், 8 கரங்களுடன் வடிவமைத்து இடம்பெறச் செய்தனர்.
பின் 4 கரங்களுடன் துர்க்கை வடிவில் வடிக்க ஆரம்பித்தனர். பின் அச்சிற்பங்கள் விஷ்ணு துர்க்கை என்றும் அழைக்கப்பட்டது. தற்போது இங்கு கண்டறிந்த சிற்பமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். இந்த சிற்பம் முட்டிவரை மண்ணில் புதைந்து, 4 அடி உயரத்தில் காட்சி தருகிறது. ஒரு பெரிய பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கி உள்ளனர். தலையில் பல அடுக்குகளைக் கொண்ட கரண்டமகுடம் காணப்படுகிறது. நீண்ட காதுகளில் அணிகலன்கள், கழுத்தில் ஆபரணம் மார்பில் சன்னவீரம் பொறிக்கப்பட்டுள்ளது. அவை சற்று சேதமடைந்து காணப்படுகிறது. சன்ன வீரம் என்பது போர் கடவுளுக்கு மட்டுமே இடம்பெறும். இடையில் இடைக்கச்சை யுடன் 4 கரங்களில், 3 கரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இடது முன் கரம் மட்டும் ஹடிஹஸ்தமாக வைத்து கம்பீரமான தோற்றத்தில் பாண்டியர்களுக்கு உரித்தான கலைநயத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை பார்க்கும் போது, இப்பகுதியில் மிகப்பெரிய சிவன் கோயில் இருந்திருக்க வேண்டும். கால ஓட்டத்தில் அழிந்திருக்கலாம். சிற்ப வடிவமைப்பை வைத்து கணக்கிடும் போது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடைக்கால பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.