பதிவு செய்த நாள்
13
ஏப்
2023
03:04
மயிலாடுதுறை: காலபைரவர் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த, காலபைரவர் கோயிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், நூற்றுக்கணக்கானோர், தேங்காய், பூசணிக்காய், பாகற்காய் இவற்றில் தீபமிட்டு வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் பழைமை வாய்ந்த காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. நாய் வாகனம் இன்றி, மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயம், காலபைரவரின் 108 நாமாவளியில், சேத்திரபாலாய போற்றி என்று கூறும் அளவிற்கு புகழ்பெற்றதாகும். பைரவரின் சூலாயுதம் இந்த கோயிலில் கிடைக்கப் பெற்றதால் ஆனந்தகால பைரவராக வீற்றிருப்பதாக புராணம் கூறுகின்றது. அர்ஜூனன் வழிபட்டதாக புராணம் கூறும் இந்த காலபைரவர் ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருமணத்தடை நீங்கவும், நினைத்த காரியம் கைகூடவும், தேங்காய், பூசணிக்காய், பாவற்காய் இவற்றில் தீபமிட்டு, காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தை சுற்றி 11 சுற்றுகள் வலம் வந்து வழிபாடு நடத்தினர்.