பதிவு செய்த நாள்
08
மே
2023
06:05
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், தென் கயிலாய பக்தி பேரவையுடன், இந்திய கடற்படை அதிகாரிகள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், கடந்த பிப்ரவரி 17ம் தேதி முதல் பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தொடர்ந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வருகின்றனர். இந்நிலையில், தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், கடந்த 10 ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் மலையேறும் சமயங்களில் தூய்மை பணி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், சிவாங்கா பக்தர்களுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் இணைந்து, நேற்று வெள்ளியங்கிரி மலையில், தூய்மை பணி நடந்தது. இதில், மலை ஏறும் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் போன்ற குப்பையை சேகரித்து, அடிவாரத்திற்கு கொண்டு வந்து அகற்றினர். இதில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிவாங்கா பக்தர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இந்திய கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வரும் மே, 14, 21, 28 மற்றும் ஜூன் 4 என அடுத்தடுத்து வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும், வெள்ளியங்கிரி மலையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்கள், 8300015111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.