பதிவு செய்த நாள்
23
மே
2023
05:05
வாலாஜாபாத்: வாலாஜாபாத் புத்தகரம் பெருமாள் கோவிலில், புத்தர் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது: வாலாஜாபாத் அடுத்த, புத்தகரம் பெருமாள் கோவிலில், ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்தோம். இங்கு, அழகிய வேலைப்பாடுடன் அமர்ந்த நிலையில், புத்தர் சிலை கண்டெடுத்தோம். இந்த சிலை, ஒரு அடி உயரத்திற்கும் குறைவாக இருந்தது. புத்தரின் சிலையில் இருக்கும் இரு காதுகளும், தோள் பட்டை வரை நீண்டுள்ளன. இரு கண்களும் திறந்த நிலையில் இருக்கின்றன. தடித்த மூக்கு, இடது தோள்பட்டை முதல் இடுப்பு வரையில், சீவர ஆடை அணிந்து உள்ளார். சிலையின் பின்புறம், தாமரை மலர் மீது, தர்ம சக்கரத்தை காண முடிகிறது. மேலும், பவுத்த மதத்தில் அணியப்படும் சீவர ஆடை மடிப்பு நன்றாக தெரியும் வகையில், சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது, 14ம் நுாற் றாண்டு சிலையாக இருக்க வாய்ப்பு உள்ளது என, உதவி தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் உதவி கல்வெட்டு ஆய்வாளர்கள் நாகராஜன், பிரசன்னா ஆகியோர் உறுதி செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.