பதிவு செய்த நாள்
24
மே
2023
03:05
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் சமேத சிவகாம சுந்தரி அம்பாள் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். நேற்று மாலை திருநாகேஷ்வரர் சன்னதியில் யாகசாலை பூஜைக்கு பின் அம்மன் சன்னதி வில்வமரத்திற்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர்,அஸ்திரதேவர், கொடிப்படம் திருவீதி வலம் வந்தது. அதிகாலை 5:45 மணிக்கு கணபதிபூஜையுடன் யாக பூஜைகள் மற்றும் கொடிபடத்திற்கும் பூஜை நடந்தது. பூஜைகளில் ரமேஷ்குருக்கள், பாஸ்கரக் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்கள் பங்கேற்றனர். பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேக,ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து காலை 6:30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு பூஜைகள் நடந்து அலங்காரத் தீபாராதனையும், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபராதனையும் நடந்தது. அடுத்து பஞ்ச மூர்த்திகளும் திருநாள் மண்டபம் எழுந்தருளினர். ஊரார்,மண்டகப்படிதாரர்கள்,பைராவி காசி வைரவன்,பேஷ்கார் சந்திரசேகர்,கண்காணிப்பாளர் கேசவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாலையில் வில்வமரம்,கொடிபடம், சுவாமிகளுக்கு காப்புக்கட்டி விழா துவங்கியது. முதலாம் திருநாளை முன்னிட்டு நேற்று இரவு சூரிய,சந்திர பிறைகளில் எழுந்தருளிய உற்ஸவ சுவாமி-அம்பாளுக்கு தீபராதனை நடந்து திருவீதி வலம் வந்தனர். திருப்புத்தூர் வட்டார நாயுடு மகாசன சங்கத்தினர் சார்பில் முதலாம் திருநாள் மண்டபகப்படி நடந்தது. தொடர்ந்து தினசரி இரவு வாகனங்களில் சுவாமி,அம்பாள் திருவீதி வலம் வருவர். ஜூன்1 ல் தேரோட்டமும், ஜூன்2 ல் தெப்பமும் நடைபெறும்.