பதிவு செய்த நாள்
19
ஜூன்
2023
09:06
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில், வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நேற்று (18ம் தேதி) துவங்கியது.
தஞ்சாவூர் பெரியகோவில் உள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் மாலையில் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா நேற்று (18ம் தேதி) கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், இன்று (ஜூன் 19) மஞ்சள் அலங்காரமும், 20ம் தேதி குங்கும அலங்காரமும், 21ம் தேதி சந்தன அலங்காரமும், 22ம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 23ம் தேதி மாதுளை அலங்காரமும், 24ம் தேதி நவதானிய அலங்காரமும், 25ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 26ம் தேதி கனி வகை அலங்காரமும், 27ம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான 28ம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு காவடி, செண்டை மேளம், நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறவுள்ளன.