1500 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேகம் 25ம் தேதி நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2023 04:06
தேவகோட்டை: தேவகோட்டை அருகே ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் 11 கி.மீ. தொலைவில் முட்டக்குத்தி கிராமம் உள்ளது. . இந்த ஊரில் சிவலிங்கம் ஆவுடை லேசாக சேதமடைந்து மண்ணிற்குள் இருந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட இடத்தையும் , விக்ரகம் சிதிலமடைந்து இருப்பது பற்றியும் அதனை எடுத்து திருப்பணி செய்யுமாறு தேவகோட்டையை சேர்ந்த நகராத்தார் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சென்னையை சேர்ந்த ஒரு ஜோதிடர் அனுமானமாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு லெட்சுமணன் தேடி வந்த போது முட்டக்குத்தியில் சுவாமி சிலை லேசாக கீறல்களுடன் இருப்பதை கண்டார். கிராமத்தினரிடம் நடந்ததை எடுத்து கூறி கிராமத்தினர் உதவியுடன் திருப்பணி செய்ய முடிவு செய்தனர். இதற்கிடையில் தொல்லியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ததில் இந்த சிலை சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விக்ரகங்கள் புதுப்பிக்கப்பட்டும் மேலும் சில புதிய விக்ரகங்கள் செய்து கோவில் புதிதாக கட்டப்பட்டது. திருப்பணி முடிந்து நாளை மறுநாள் ஜூன் 25 ந்தேதி காலை 9 மணியளவில் மங்களாம்பிகை சமேத சொர்ண காளீஸ்வரர், காளியம்மன், விநாயகர் , மாரியம்மன், நவகிரகங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இரண்டு கால யாக பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேகத்தன்று முட்டக்குத்தி விலக்கு வரை பஸ் விடுவதற்கு அரசு பஸ் போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு பஸ் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.