திருப்போரூர்: ஆதிதிராவிட பகுதி திருக்கோவில் திருப்பணி நிதியுதவித்திட்டத்தில், பெருமாளேரி வசந்தபுரி விநாயகர் கோவில் திருப்பணிக்கு, 50 ஆயிரம் ரூபாய் திருப்பணி செய்ய வழங்கப்பட்டது.திருப்போரூர் தொகுதி வடகடும்பாடி ஊராட்சி பெருமாளேரி கிராமத்தில் வசந்தபுரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை சீரமைத்து தரவேண்டும் என, அப்பகுதி மக்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து, மாநில அரசின், ஆதிதிராவிட பகுதி திருக்கோவில் திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ், பெருமாளேரி கோவிலை செப்பனிட நிதியுதவி வழங்கும் விழா, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அலமேலு தலைமை தாங்கினார். திருப்போரூர் கந்தசுவாமி கோவில், செயல்அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், வசந்தபுரி விநாயகர் கோவில் திருப்பணிக்குழு தலைவர் சிவக்குமார் மற்றும் குழுவினரிடம், 50 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்.