பதிவு செய்த நாள்
06
அக்
2012
10:10
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி, திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, சாப்பிட மறுத்து வருகிறது. கால்நடை டாக்டர்கள், யானையை பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.சேலம், சுகவேனேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமாக ராஜேஸ்வரி, 37, யானை உள்ளது. பத்து ஆண்டுக்கு முன், யானையின் காலில் காயம் ஏற்பட்டது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.தமிழக அரசு, இரண்டு முறை நடத்திய முதுமலை யானைகள் முகாமுக்கு ராஜேஸ்வரி அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டும், முடியவில்லை. இதனால், கோவில் வளாகத்தில், ராஜேஸ்வரி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் இரவு முதல், திடீரென யானைக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு, சாப்பிட மறுத்து வருகிறது. கோவில் நிர்வாகத்தினர், கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று மதியம், கால்நடை டாக்டர்கள், யானையை பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில், கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், ராஜேஸ்வரி யானை பராமரிப்பில் எவ்வித அக்கறையும் கொள்ளாமல், தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், இவ்வாறு அடிக்கடி யானை உடல் பாதிப்புக்கு உள்ளாவதாக, பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு, மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி, உணவு முறை, மாதம் ஒரு முறை சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.* ஃபோட்டோ எடுக்க தடை: யானை ராஜேஸ்வரிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதை அடுத்து, "காலைக்கதிர் ஃபோட்டோகிராபர், யானையை படம் பிடிக்க முயன்றார். அப்போது, கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், ஆத்திரமடைந்து, கத்த ஆரம்பித்தார்.அவர், ஃபோட்டோகிராபரை பார்த்து, ""உங்களை எல்லாம் யாருய்யா உள்ளே விட்டா... வெளியே போயா... வெளியே போயா... என, காட்டு கத்தல் கத்தியவர், ""சின்ன விஷயத்தை பெரிசா ஆக்குறதே உங்களுக்கு வேலை. பத்திரிகைகாரங்களால தான் கோவிலே குட்டிச்சுவராகி விட்டது, என, கத்தியபடி சென்றார்.யானையை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.