பதிவு செய்த நாள்
23
ஜூலை
2023
08:07
மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா இன்று கொடியேற்றதுடன் துவங்கியது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா இக்கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். ஆடிக்குண்டம் திருவிழா கடந்த ஜூலை 18 ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து ஆடிக்குண்டம் திருவிழா இலட்சார்ச்சனை,கிராமசாந்தியும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக பவானியாற்றில் இருந்து சிம்மவாகனம் பொறிக்கப்பட்ட கொடிமரம் திருவீதி உலா உடன் கோவிலை வந்தடைந்தது.கோவிலை சுற்றி வந்த பின்னர்,மேள,தாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற்றுச்சென்றனர்.
இதனை தொடர்ந்து ஆடிக்குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்சியானது வரும் செவ்வாய்கிழமையன்று அதிகாலை 3.00 மணிக்கு அம்மன் அழைப்பு,பின்பு காலை 6.00 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தாசம்பத், செயல் அலுவலர் செய்து வருகின்றனர்.பூஜைகளை தலைமை பூசாரி ரகுபதி,செய்து வருகின்றார்.மேலும் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில்,,காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன்,உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், மற்றும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.