பதிவு செய்த நாள்
04
ஆக
2023
08:08
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் ஆடி 18ம் பெருக்கு பெண்கள் தாலி மாற்றி அணியும் விழா, குலதெய்வம் வழிபாடு, தாய்மாமன் தினவிழா ஆகிய முப்பெரும் விழா கோலாகலமாக நடந்தது.
பெரியகுளத்தில் ஆடி 18ம் பெருக்கு திருவிழா கோலாகலமாக நடந்தது. பெரியகுளம் வராக நதி பாலசுப்பிரமணியர் படித்துறை ஐஸ்வர்ய விநாயகர் கோயிலில் ஏராளமான பெண்கள் தங்களது கணவருக்கு ஆயுள் விருத்தியும், குடும்பம் ஐஸ்வர்யமாக வாழ தாலி மாற்றிக் கட்டினார். இதே போல் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மஞ்சளாற்று கரையோரம் ஏராளமான பெண்கள் தாலி மாற்றிக் கொண்டனர்.
குலதெய்வம் வழிபாடு: பெரியகுளம் வீச்சு கருப்பணசுவாமி, சங்கிலி கருப்பணசுவாமி, மண்டு கருப்பணசாமி, தாமரைக்குளம் சீலைக்காரி அம்மன், கவுமாரியம்மன், கம்பம் ரோடு காளியம்மன், பள்ளத்து காளியம்மன், கீழரதவீதி காளியம்மன், ஷீரடி சாய்பாபா கோயில், நாமத்வார் பிரார்த்தனை மையம், சருத்துப்பட்டி கோச்சடை முத்தையா கோயில், சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயில் உட்பட பெரியகுளம் தாலுகாவில் ஏராளமான கோயில்களில் சிறப்பு வழிபாடும், குலதெய்வம் வழிபாடு கோலாகலமாக நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பங்காளிகளுக்கு வடை, பாயாசம் விருந்து: திருவிழா காலங்களில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும், தமிழகத்தில் எந்த ஊரில் வேலை செய்தாலும் பங்காளிகள் ஆடி 18ம் பெருக்கு கோயில் கொடை விழாவில் குலதெய்வம் வழிபாட்டில் பங்கேற்று தலவாழை இலையில் வெளியூர் பங்காளிகளுக்கு, உள்ளூர் பங்காளிகள் வடை, பாயாசத்துடன் விருந்து வழங்கி தங்களது உறவுகளின் பாசத்தை வெளிபடுத்துகின்றனர்.
தாய்மாமன் தினம் கொண்டாட்டம்: ஆக., 3 தாய்மாமன் தினம் கொண்டாடப்படுகிறது. நேற்று ஆடி 18 ம் பெருக்கை முன்னிட்டு தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் தாய்மாமன் மடியில் உட்கார வைத்து ஏராளமான குழந்தைகளுக்கு காதணி விழா நடந்தது.