உசிலம்பட்டி: ஆடிப்பெருக்கு நாளில் பாரம்பரிய விழாவாக தாய்மாமனுக்கு மரியாதை செலுத்தி வணங்கி தானியங்கள் பெற்று கொண்டாடினர்.
உசிலம்பட்டி பகுதியில் தாய்மாமன் என்ற உறவு முறையை முக்கியமான உறவாக கொண்டாடுகின்றனர். தனது சகோதரியின் பிறப்பில் இருந்து திருமணமாகி செல்வது வரை மட்டுமல்லாது, அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து உரிமை கொண்டாடும் உறவுமுறையாக தாய்மாமன் உறவு உள்ளது. தாய்க்கு நிகராக உள்ள இந்த தாய்மாமனை போற்றும் விதமாக ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தில் தனது மொத்த பங்களிப்பையும் தரும் தாய்மாமனுக்கு மரியாதை செய்து, அவர்களிடம் ஆசி வாங்கும் மருமகன்கள், தங்களை இறுதிவரை காவல் காக்க வேல்கம்பு பரிசாக அளித்து வணங்கி வருகின்றனர். தாய்மாமன்களுக்கு மரியாதை செலுத்தும் விழா உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் நேற்று கொண்டாடினர். முன்னதாக வாலாந்தூர் காசிப்புலி மந்தையிலிருந்து தாய்மாமன்களை ஊர்வலமாக அழைத்து வந்து, அங்காள ஈஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, தாய்மாமன்களுக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து தாய்மாமனிடம் தானியங்களை மருமகன்மார்கள் பெற்று ஆடிப்பட்ட விதைப்பிற்காக எடுத்து சென்றனர். விழா ஏற்பாடுகளை கள்ளர் நாடு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.