பதிவு செய்த நாள்
30
நவ
2023
03:11
நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயம், வடக்கு பொய்கைநல்லூர் கோரக்கர் சித்தர் கோவிலில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.
என் மண், என் மக்கள் என்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று இரவு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், கடலோர பகுதிகளில் கனமழை கொட்டுகிறது என்பதால், வரும் 5 ம் தேதி வரை பாதயாத்திரையை அண்ணாமலை ஒத்திவைத்துள்ளார். இதனால் இன்று நாகை மற்றும் கீழ்வேளூர் தொகுதிகளில் பாதயாத்திரை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சென்னை புறப்பட்டு சென்றார்.
முன்னதாக வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்திற்கு வந்தவரை பங்கு பாதிரியார் அற்புதராஜ் தலைமையிலான பாதிரியார்கள் வரவேற்று தேவாலயத்திற்குள் அழைத்து சென்றனர். தேவாலய சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற அண்ணாமலை, மெழுகுவர்த்தி ஏற்றி, ஆரோக்கிய மாதாவை வழிபட்டார். தொடர்ந்து வடக்கு பொய்கைநல்லூர், கோரக்க சித்தர் கோவிலுக்கு வந்த அண்ணாமலையை, கோவில் அறக்கட்டளை தலைவர் ஜீவானந்தம் வரவேற்றார். கோவிலில் கோரக்க சித்தரை வழிபட்ட அண்ணாமலை, அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.