பதிவு செய்த நாள்
09
டிச
2023
12:12
உத்தரபிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆண்டு ஜனவரி, 22-ம் தேதி நடக்கவுள்ளது. விழாவில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஜன.,16ம் துவங்கி 22ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து 121 அறிஞர்கள் அயோத்தி வருகின்றனர். இவர்களை சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவை காசி அறிஞர் கங்கா பட் பரம்பரையில் வந்த, காசி ஆச்சாரியரான பண்டிட் மதுராநாத் தீட்சித் வழிநடத்த உள்ளார்.
இது குறித்து மதுராநாத் தீட்சித் கூறும் போது; ராமரின் ஆசீர்வாதத்துடன் எனது கடமைகளைச் செய்வேன்” என்றார். குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.