அன்னூர்; அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவமும், கும்மியாட்டமும் நடந்தது.
அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. நேற்று காலையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு கரி வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர், பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. இதையடுத்து பவளக்கொடி குழுவின் கும்மியாட்டம் நடந்தது. சிறுமியர் முதல் பெரிய பெண்கள் வரை 100 பேர் கும்மி பாடலுக்கு ஏற்ப கைகளை மேலும் கீழும் தாழ்த்தி நளினமாக ஆடினர். இரண்டரை மணி நேரம் கும்மியாட்டம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர். இதையடுத்து தாசபளஞ்சிக சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையில், இரண்டு நாட்களுக்கு வைக்கப்பட்டிருந்த தற்காலிக உண்டியல் திறக்கப்பட்டது. காணிக்கைகள் எண்ணப்பட்டன. தற்காலிக உண்டியலில் 16 ஆயிரத்து 865 ரூபாய் பெறப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது.