பதிவு செய்த நாள்
15
டிச
2023
05:12
திருப்பரங்குன்றம்; அயோத்தியில் ஜன. 22ல் நடக்கும் ராமர் கோயில் கும்பாஷேகத்திற்காக திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயில் தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான காசி விஸ்வநாதர் கோயில் மலை மேல் உள்ளது. அங்குள்ள சுனையில் என்றும் வற்றாத புனித தீர்த்தம் உள்ளது. இன்று காலை புனித தீர்த்தம் எடுப்பதற்காக பா.ஜ., ஒ.பி.சி. அணி மேற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் விக்கி, இளைஞரணி மாநில செயற்குழு வெற்றிவேல் முருகன், தொகுதி பொறுப்பாளர் ராமதாஸ், மண்டல் பொதுச் செயலாளர் ராஜசேகர், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம், ஹிந்து முன்னணி நகர் தலைவர் பிரசாந்த் ஆகியோர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர். பா.ஜ., நிர்வாகிகள் இரண்டு பேர், ஹிந்து முன்னணி, அகில பாரத அனுமன் சேனா நிர்வாகி இரண்டு பேர் தீர்த்தம் எடுக்க மலை மேல் சென்றனர். பாதுகாப்பிற்காக போலீசார் உடன் சென்றனர். மலைமேல், கோயில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்து பித்தளை குடத்தில் புனித தீர்த்தம் எடுத்து கொடுத்தனர்.
தீர்த்தத்தை எடுத்து மலையில் இருந்து இறங்கும் பொழுது, மலையிலுள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹாவிற்கு சென்ற கேரளா முஸ்லிம்கள் விபரம் கேட்டனர். பா.ஜ., நிர்வாகிகள் விபரம் தெரிவித்தனர். அவர்கள் தீர்த்தத்தை தொட்டு வணங்கி வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், முதலில் திருப்பரங்குன்றம் போலீசார் அனுமதி மறுத்தனர். கமிஷனர் லோகநாதனிடம் கோரிக்கை வைத்தோம். அவர் நிபந்தனையுடன் அனுமதி அளித்த குறிப்பிட்ட நிர்வாகிகள், போலீசார், சிவாச்சாரியார் மலை மேல் சென்று தீர்த்தம் எடுத்து வந்தோம். தீர்த்தம் நாளை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும். இஸ்லாமிய சகோதரர்களின் செயல் எங்களை நெகிழச் செய்தது என்றனர்.