பதிவு செய்த நாள்
16
டிச
2023
03:12
உத்தரகோசமங்கை; ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ளது உத்தரகோசமங்கை. மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் மற்றும் மரகத நடராஜர் சன்னதி பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற கோயிலாக விளங்குகிறது. உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் நடக்கும் ஆருத்ரா மஹா தரிசன விழா பிரசித்தி பெற்றதாகும். மங்களநாதர் சன்னதி அருகே வடக்கு முகமாக வீட்டிற்கும் பச்சை மரகத நடராஜர் திருமேனியில் வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். வருடத்திற்கு ஒரு முறை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மூலவர் மரகத நடராஜரின் திருமேனியில் இருக்கக்கூடிய சந்தனம் படி களைதல் நடக்கும். வருகிற டிச., 18 அன்று மாலை காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது.
வருகிற டிச., 26 (செவ்வாய்க்கிழமை) காலை 8:00 மணியளவில் மரகத நடராஜரின் திருமேனியில் உள்ள சந்தனம் களையப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக காட்சியளிக்கிறார். பால், பன்னீர், திரவியம், மஞ்சள் பொடி, தேன், மூலிகை பொடி உள்ளிட்ட 32 வகையான அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடக்கிறது. அன்றைய தினம் இரவு 11:00 மணிக்கு மேல் ஆருத்ரா மகா அபிஷேகம் துவங்கும். பின்னர் மரகத நடராஜர் சமேத சிவகாமி அம்மனின் திருமேனியில் புதிய சந்தனம் காப்பிடும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் டிச., 27 (புதன்கிழமை) அதிகாலை 4:00 மணியளவில் அருணோதய காலத்தில் புதிய சந்தன காப்பிடப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரதனைகள் நடக்க இருக்கின்றது. காலை 10:00 மணியளவில் கல் தேர் மண்டபத்தில் இருந்து கூத்தர் பெருமான் எழுந்தருளி வீதி உலாவும், மாலை 5:00 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் இரவு 8:00 மணிக்கு மேல் மாணிக்கவாச சுவாமிக்கு காட்சி கொடுத்து சிறப்பு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவையும் நடக்கிறது. ஆருத்ரா தரிசன விழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.