பதிவு செய்த நாள்
22
அக்
2012
10:10
கும்பகோணம்: நாதன்கோயில் ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோயிலில் நேற்று நவராத்திரி, ஏழாவது நாள் சிறப்பு வழிபாடு நடந்தது.108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில், 40ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோயில் சேத்திரமாகும்.நாதன் கோயில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில், கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது.நந்தி பெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம். பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளியிருக்கும் இப்பெருமானை திருமங்கை ஆழ்வார், 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த மண்ணுலகில் ஒப்பற்ற திவ்ய தேசமாகச் சிறப்பிக்கப்பட்டு தட்சிண ஜெகந்நாதம் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டு வருகிறது.மேலும் மகாலெட்சுமி பிரார்த்தனை செய்து, எட்டு அஷ்டமி விரதம் இருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும், சுக்ல பட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமம் பங்கேற்று ஸ்வாமியை தரிசனம் செய்தால், மாங்கல்யதடை, குழந்தை பேரின்மை, குடும்ப பிரச்சினைகள், நாட்பட்ட நோய்கள் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.மேலும் நவராத்திரியை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, வீதிவுலாவும் நடந்து வருகிறது. அதன்படி நேற்று உபயதாரர் ரவி மூலம், செண்பகவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. பின்னர் மாலை தாயார் ஊஞ்சல் உற்சவமும், வீதிவுலாவும் நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கார்ய சபா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.