திருப்புவனம்; தென்மாவட்டங்களில் மாசி, பங்குனி மாதங்களில் மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் தொடங்கியுள்ளதால் திருப்புவனத்தில் தொழிலாளர்கள் அக்னிசட்டிகள் தயாரிப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர். மாசி, பங்குனி மாதங்களில் தென்மாவட்டங்களில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும், திருப்புவனம், தாயமங்கலம், இருக்கன்குடி உள்ளிட்ட ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் விரதமிருந்து அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பொம்மை, பாதம், நாகம் உள்ளிட்டவைகளை சுமந்து வந்து கோயில்களில் நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். இதற்காக திருப்புவனம் வேளார் தெருவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அக்னிசட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் கூறுகையில் : சுற்றுப்புற சூழலை பாதிக்காத பச்சை மண் சட்டிகள் இவைகள், தண்ணீரில் போட்டாலும் கரைந்து விடும், மண்ணை எந்த விதத்திலும் பாதிக்காது நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 சட்டிகள் வரை தயாரிக்கிறோம், பின் அதற்கு வர்ணம் பூசி அம்மன் படங்களை வரைந்து வெயிலில் காயவைத்து விற்பனை செய்கிறோம், அக்னி சட்டிகள் 500 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் கண்பானை, பொம்மை உள்ளிட்டவைகளும் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கண்மாய்களில் தண்ணீர் இருப்பதால் சவடு மணலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது, என்றார். திருப்புவனம் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலில் வரும் மார்ச் 4ம் தேதி இரவு எட்டு மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளதால் பொம்மைகள் , அக்னிசட்டிகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.