சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா; ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2024 05:03
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், தடாகம் வட்டாரங்களில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி விழாவையொட்டி பூஜைகள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர் மகாலட்சுமி கோவில், வேட்டைக்காரசாமி, வீரபத்திரர், தொண்டம்மாள் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவையொட்டி இங்கு சிறப்பு பூஜை, ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த ஆண்டு, 8ம் தேதி இரவு சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 9ம் தேதி காலை, 7.00 மணிக்கு வேட்டைக்கார சாமி கோவில் ஊர்வலத்தில் பாதக்கொரடு என்னும் மரக்கட்டையால் ஆன ஆணிக்கால் பாதரட்ச்சைகளை பூசாரி அணிந்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள விருத்தபுரீஸ்வரர் கோவிலில், 8ம் தேதி இரவு விடிய, விடிய பல்வேறு அபிஷேக பூஜைகள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடிகரை வில்லீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் விடிய, விடிய நடக்கிறது. இதே போல தடாகம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.