திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2024 03:03
பாலக்காடு; வக்கந்தரை திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கேரளாவில் முக்கிய பகவதி அம்மன் கோவில்களில் ஒன்று பாலக்காடு வடக்கந்தரையில் உள்ள திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லாம் மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாசி மாதம் வேல என்ற பெயரில் அழைக்கப்படும் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழாவிற்கு கடந்த மார்ச் 1ம் தேதி கொடியேறியது. திருவிழாவையொட்டி கடந்த 16 நாட்கள் கோவில் மைதானத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழா நாளான இன்று காலை கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பித்தன. தொடர்ந்து 6 மணிக்கு கோவை ராயப்பன் குழுவின் நாதஸ்வர கச்சேரி நடந்தன. 7 மணிக்கு அம்மனின் சிறப்பு வழிபாடுகளில் ஒன்றான "நிவேதிய உருளி (செம்பு) மக்கள் எடுத்து வரும் வைபவம் நடந்தது. 8க்கு பரய்க்காடு தங்கப்பன் மாரார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்து மணி குடைகள் சூடிய 11 யானைகளின் அணிவகுப்பில் "காழ்ச்சீவேலி என்ற நிகழ்வு நடந்தன. இதில் சிறக்கல் காளிதாசன் என்ற யானை மீது அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 12 மணிக்கு உச்ச பூஜையும், கொட்டி பாடி சேவை என்ற நிகழ்ச்சியும் நடந்தது. 1 மணிக்கு தாயம்பகை என்ற பெயரில் அறியப்படும் செண்டை மேளம் நடந்தது. பிற்பகல் ஆல் மரத்தடியில் இருந்து செண்டை மேளம் முழங்க 11 யானகள் அணிவகுப்பில் அம்மன் எழுந்தருளி தெரு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் வண்டி வேடங்கள், பூ காவடி, தப்பட்டை, பொள்ளாச்சி கொட்டு, நாசிக் பான்ட், பான்ட் வாத்தியம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியவை இடம் பிடித்திருந்தது. இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.