அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2024 10:03
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
காசியில் வாசி அவிநாசி என போற்றுதலுக்குரிய தலமாகவும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என பெருமை உடைய ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். நேற்று மாலை 4:30 மணி முதல் ஐந்து முப்பது மணி வரை பிரதோஷ வழிபாடும் அதனைத் தொடர்ந்து இரவு எட்டு முப்பது மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை முதல் கால பூஜையும் இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை இரண்டாம் கால பூஜையும் நள்ளிரவு 12:30 மணி முதல் 1:30 மணி வரை மூன்றாம் கால பூஜையும் அதிகாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை நான்காம் கால பூஜையும் 5 30 மணி முதல் 6:30 மணி வரை ஊசக்கால பூஜையாக ஐந்தாம் கால பூஜை நடைபெற்றது. மேலும் அன்னதான கூட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பிரதிமாலிங்கம் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு,ஐந்து கால பூஜையில் 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கோவில் தர்பன மண்டபத்தில் சிவனடியார்கள் சிவலிங்க விக்கிரகங்களுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்தனர். மஹா சிவராத்திரி விழாவில், பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாக தரப்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மஹா சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் (பொறுப்பு) மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணி முதல் தொடர்ந்து உபயதாரர்கள் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் வளாகத்தில் வழங்கப்பட்டது.