திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமி கோயிலில் பாரிவேட்டை திருவிழா நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்ஸவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மஹா சிவராத்திரியன்று குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருளினார். தினம் அபிஷேகம், பூஜை நடந்தது. நேற்று இரவு குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன், ராக்காயி அம்மன், பெரிய கருப்பண்ண சுவாமி, சங்கிலி கருப்பண்ண சுவாமி, அக்னி வீரபத்திரன் சுவாமி, இருளப்ப சுவாமி மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் பூஜாரிகள் கிரி வலப்பாதையிலுள்ள காட்டு பேச்சியம்மன் இருப்பிடம் சென்று வேட்டை சாத்துப்படி செய்து பூஜை நடத்தினர். இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பூப்பல்லக்கில் அங்காளபரமேஸ்வரி அம்மன் புறப்பாடாகி காட்டு பேச்சியம்மன் இருப்பிடம் சென்று பாரி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை அங்காள பரமேஸ்வரி மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயில் சென்றடைந்தார்.