செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று தேர்திருவிழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி மயானக்கொள்ளையும், 12ம் தேதி தீமிதி விழாவும் நடந்தது. இன்று மாலை 3.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்க உள்ளது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின் படி மயானக்கொள்ளையன்று விஸ்வரூபாம் எடுக்கும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் அனைவரும் தேரின் பாகங்களாக இருந்து அம்மனுக்கு தேர் திருவிழா நடத்து கின்றனர். இந்த பாரம்பரியத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் வடிவமைத்து தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு விழாவிற்காக கடந்த ஒரு மாதம் முன்பு பச்சை மரங்களை கொண்டு புதிய தேர் கட்டும் பணி துவங்கி நடந்து வந்தது. இன்று இறுதி கட்ட அலங்காரம் செய்து மாலை 3 மணிக்கு சாந்த கோலத்தில் உள்ள அம்மனை தேரில் ஏற்றி மாட வீதிகள் வழியாக திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பல லட்சம் பக்தர்கள் குவியும் முக்கிய விழா என்பதால் கூடுதல் பாதுகாப்பிற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றனர்.
விடுமுறை; விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் முக்கிய விழா என்பதால் ஆண்டு தோறும் விழுப்புரம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்த ஆண்டும் கலெக்டர் பழனி விழுப்புரம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளார்.