திருப்பதி; ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த மூன்றாம் தேதி கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கிய வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 10வது நாளில் கிரிவலம் வந்து காளஹஸ்தீஸ்வரர் அருள்பாலித்தார்.
வழக்கமாக ஆண்டுதோறும் இரண்டு முறை சிவன் கோயில் சார்பில் கிரிவலம் நடப்பது வழக்கம். பொங்கல் பண்டிகை சமயத்தில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ சமயத்தில் நடைபெறும் திருக் கல்யாணோற்சவத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் கிரிவலம் செல்வார். அதே போல் மீண்டும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது நடக்கும் சிவன் - பார்வதி திருக்கல்யாணத்திற்கு வந்திருந்த முக்கோடி தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் பக்தர்கள் அனைவருக்கும் பிரியாவிடை வழங்கும் வகையில் கைலாச கிரிவலம் நடப்பது வழக்கம். இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் 10வது நாளில் சுவாமி கிரிவலம் கோலாகலமாக நடந்தது. சிவன் கோயில் அருகில் இருந்து 21 கி.மீ., தூரம் உள்ள கைலாசகிரி மலைச் சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து சென்றனர். ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி அம்மையார்களை பின்தொடர்ந்து சென்றனர். செல்ல இயலாத பக்தர்கள், சிவன் கோயில் அருகில் உள்ள சுகபிரம்ம ஆசிரமம் அருகில் சென்று உற்சவ மூர்த்திகளை வரவேற்றனர். கிரிவல நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்கள் சுவாமி அம்மையாரை தரிசித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.இந்த கிரிவலத்தில் சென்ற பக்தர்களுக்கு வழியில் சிவன் கோயில் சார்பில் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் நீர் மோர் போன்றவை வழங்கப் பட்டது. நான்கு மாட வீதிகள் வழியாக சுமார் 21 கிலோ மீட்டர் கிரிவலம் செல்லும் வழியில் கிராம மக்கள் வெயிலின் தாக்கம் தணிக்கவும், வழியை தூய்மை படுத்தும் வகையில் தண்ணீரை தெளித்து சாமி அம்மையார்களை வரவேற்றனர். இந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.