பதிவு செய்த நாள்
14
மார்
2024
11:03
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின், 189வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
வித்யாலயா வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவிலில் காலை மங்கள ஆரத்தியுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சிகளை, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற வேத பாராயணம், பஜனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மகா ஹோமம் ராமகிருஷ்ணர் கோவிலில் நடந்தது. இதில், 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. தொடர்ந்து பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. பள்ளி, கல்லூரி, அலுவலகம், குடியிருப்பு வழியாக சென்று கோவிலில் நிறைவடைந்தது. சுவாமிஜிக்கள், பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.