பதிவு செய்த நாள்
14
மார்
2024
12:03
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற் கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்நாளில் சாவித்திரி தேவியை வழிபடுவதால் இதனை ’சாவித்திரி விரதம்’ என்றும் அழைப்பர். இந்த நோன்பு நாளில் தான், எமனின் பிடியில் இருந்து கணவர் சத்தியவானை மீட்டாள் சாவித்திரி. இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருப்பர். நோன்பில் மிக முக்கியமான விஷயம் சாவித்திரி பாடம். அதாவது சத்யவான் சாவித்ரி கதையினைப் படிப்பது, கேட்பது, சொல்வது அவசியம். பொதுவாக மூத்த சுமங்கலிகள் இதனைச் சொல்ல, மற்றவர்கள் சிரத்தையாகக் கேட்பார்கள். இந்தக் கதை, கர்ண பரம்பரையாக ஆதரிக்கப்பட்டு இன்றும் உயிரோடிருக்கும் பாட்டுக்களுள் ஒன்று.
இனி சாவித்திரியின் வரலாறை பார்ப்போம். மந்திர தேசத்து மன்னர் அஸ்வபதி. ஒருநாள் நாரதரிடம், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைச் சொல்லி வருந்தினார் மன்னர். ’காரடையான் நோன்பு’ இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றார் நாரதர். அதன்படியே மன்னருக்கு பிறந்தாள் சாவித்திரி. வீரமங்கையாக மகளை வளர்த்தார் அவர். ஒருநாள் வேட்டைக்குப் போன சாவித்திரி, சாளுவ தேசத்து மன்னர் சால்வன், அவரது மனைவி, மகன் சத்தியவானைச் சந்தித்தார்.
போரில் நாட்டை இழந்த சால்வன், காட்டில் குடில் அமைத்து வாழ்ந்தார். சால்வனும் அவரது மனைவியும் பார்வை குறை உள்ளவர்கள். அவர்களை பாசமுடன் சத்தியவான் கவனிப்பதைப் பார்த்த சாவித்திரி, அவன் மீது காதல் கொண்டாள். ’இந்த குணாளனே எனக்கு ஏற்ற கணவர்’ எனத் தீர்மானித்தாள். விஷயத்தைத் தன் தந்தையிடம் தெரிவிக்க அவரும் சம்மதித்தார். நாரத மகரிஷிக்கு மகளின் விருப்பத்தை தெரிவித்தார் மன்னர் அஸ்வபதி. ’ சத்தியவானுக்கு அற்பாயுள் என்பதால் எமன் அவனை நெருங்கும் காலம் வரப் போகிறது.’ என எச்சரித்தார். ஆனாலும் மன உறுதியுடன் சத்தியவானைக் கணவராக அடைந்தாள் சாவித்திரி. அரண்மனை வாழ்வைத் துறந்து காட்டிற்குச் சென்றாள். மாமனார், மாமியாரைப் பரிவுடன் கவனித்தாள். காலம் வேகமாக ஓடியது. சத்தியவானின் ஆயுள் முடியும் காலம் நெருங்கியது. ஒருநாள் சாவித்திரியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த சத்தியவானின் தலை கீழே நழுவியது. கணவரின் உயிரை எமன் கவர்ந்து செல்வது அவளுக்கு தெரிந்தது. தன் கற்புத்திறத்தால் எமனைப் பின்தொடர்ந்தாள். இறுதியில் போராடி கணவரின் உயிரையும் மீட்டாள். அப்போது மாமனார், மாமியாருக்கு கண் பார்வை, சால்வனின் இழந்த நாடு, தன் தந்தையாருக்கு ஆண் வாரிசு என பல வரங்களை எமனிடம் பெற்றாள்.
பொதுவாக பெண்களின் பெயருக்கு பின்னர் கணவரின் பெயரை எழுதுவது வழக்கம். ஆனால் கணவரின் மீதுள்ள பக்தியால் இவளை மட்டும் ’சத்தியவான் சாவித்திரி’ என அழைக்கப்படுகிறாள். இந்த நாளில் சுமங்கலிகள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக பூவால் சுற்றப்பட்ட மஞ்சள் சரடை கழுத்தில் அணிந்து கொள்வர். கணவர் (அ) வயது முதிர்ந்த சுமங்கலிகளின் கைகளால் சரடு அணிவது சிறப்பு. திருமணம் ஆகாத கன்னியர் சரடு கட்டிக் கொள்ள நல்ல மணவாழ்வு அமையும். விரதமிருப்பவர்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து இனிப்பு, உப்பு அடைகள் செய்வர். உருகாத வெண்ணெய்யை அடையோடு படைத்து வழிபடுவர். குடும்பத்திலுள்ள பெண்கள் ஒன்றாக அமர்ந்து வெண்ணெய் சேர்த்து அடை சாப்பிட வேண்டும். பசுக்களுக்கு இதை சாப்பிடக் கொடுப்பது மிக அவசியம். அப்போது தான் நோன்பு முழுமை அடைவதாக ஐதீகம். இந்த விரதம் மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள் அம்மனுக்கு கேசரி (அ)சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டபின், மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்ளலாம். பார்வதி தேவிக்கும், சாவித்திரி நோன்புக்கும் புராணரீதியாக தொடர்புண்டு. ஒருமுறை கயிலாயத்தில் விளையாட்டாக சிவனின் கண்களை மூடினாள் பார்வதி. இதனால் உலகமே இருண்டது. தான் செய்த தவறுக்கு வருந்திய அவள், சிவனிடம் பரிகாரம் கேட்டாள். காஞ்சிபுரத்தில் கம்பை ஆற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து பூஜிப்பாயாக என்று வழிகாட்டினார் சிவன். அவளும் வழிபட்டு வந்தபோது ஒருநாள் ஆற்றில் வெள்ளப் பெருக்கு வந்தது. நீரில் அடித்துச் செல்லாமல் இருக்க, சிவலிங்கத்தை பார்வதி இறுக தழுவினாள். அப்போது அங்கு சிவன் காட்சியளித்ததோடு, சாவித்திரி விரத முறையை எடுத்துரைத்தார். பார்வதியும் இந்த நோன்பை மேற்கொண்டு பலன் பெற்றாள்.
இந்த விரதத்தை காமாட்சி அம்மனே சாவித்ரிக்குச் சொன்னதாகவும் ஒரு புராணக் கதை உண்டு. அம்மனே சொன்ன பெண்களுக்கான பிரத்யேக விரதம் ஆகும். காரடையான் நோன்பன்று சுமங்கலி பாக்கியம் பெற சாவித்திரி தேவியைப் பிரார்த்திப்போம்.