நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2024 02:03
நான்குநேரி; நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதும் ஆகும். இங்கு நித்திய எண்ணெய் காப்பு நடப்பது கோயிலின் தனி சிறப்பு. இங்கு வானமாமலை பெருமாள் மூலவர் சுயம்புவாக தோன்றியவர். இத்தலம் நம்மாழ்வாரால் 11 பாடல்கள் பாடப்பெற்றது. இத்திருத்தலத்தில் மட்டுமே ஸ்ரீசடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பூஜை சமயம் தவிர மற்ற நேரங்களில் ஜடாரி ஆசீர்வாதம் கிடையாது. திருமலை திருப்பதியில் இருந்து இங்கு எழுந்தருளிய ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கும், பெருமாளுக்கும் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி திருக்கல்யாண உற்சவம் 11 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலையில் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து எண்ணெய்காப்பு காலை சந்தி முதலியவைகள் நடந்தன. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கொடிமரத்திற்கு அருகில் ஏழுந்தருளினார். கொடிப்பட்டம் பல்லக்கில் எடுத்து வரப்பட்டு கொடிமரம் முன் வைக்கப்பட்டு கும்ப பூஜையை அடுத்து கொடியேற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தீர்த, ஜடாரி, பிரசாத வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நான்குநேரி வானமாமலை மடத்தின் 31 வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. 5ம் திருநாள் கருடசேவையும், 7ம் திருநாள் தங்க பல்லக்கும், கண்ணாடி சப்பரமும், 9ம் திருநாள் திருத்தேரும், அன்று இரவில் பெருமாள் தாயார் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி உத்திர நாளில் தீர்த்தவாரி மற்றும் பட்டணபிரவேசம் நடக்கிறது.ஏற்பாடுகளை ஜீயர் மடத்தினர் செய்துள்ளனர்.