பதிவு செய்த நாள்
24
மார்
2024
10:03
பழநி; பழநி, கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
பழநி, அடிவாரம், திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா மார்ச்.18 கொடியேற்றத்துடன் துவங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, காவிரி நதியிலிருந்து புனித நீரை தீர்த்தக்காவடியாக எடுத்து வந்தனர். திருவிழாவில் இன்று வரை வள்ளி தெய்வானை முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் கிரிவீதி உலா நடைபெற்றது. மாலையில் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
ஆறாம் நாளான நேற்று திருஆவினன்குடி கோயில் முன் (மார்ச் 23ல்) இரவு 7:01 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷமிட்டனர். தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு சன்னதி வீதி, கிரி வீதியில் நடைபெற்றது. பங்குனி உத்திர தினமான இன்று (மார்ச் 24) அதிகாலை தீர்த்தம் வழங்குதல் நடைபெறும். கிரிவீதியில் மாலை 4:00 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெறும். அதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடக்கும். மார்ச் 25,ல் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, மார்ச்.26,ல் வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. மார்ச் 27 ல் இரவு கொடி இறக்குதல் நடைபெறும். அதன்பின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடைபெறும். திருக்கல்யாண உற்ஸவத்தில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.