அவிநாசி லிங்கேஸ்வரர் அம்மன் தேர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2024 04:04
அவிநாசி; அவிநாசி லிங்கேசுவரர் கோவிலில் சித்திரைத் தேர்த்திருவிழாவில் ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் தேர் இழுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் ஓம் சக்தி,பராசக்தி அரோகரா கோசத்தோடு தேரை வடத்தைப்பிடித்து இழுத்து வழிபட்டனர். முன்னதாக கடந்த இரண்டு நாட்களாக பெரிய தேர் திருவீதி உலா நடைபெற்றது. காசியில் வாசி அவிநாசி என்ற போற்றுதலுக்குரியதும் மிக பழமைவாய்ந்ததுமான ஸ்ரீ கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நாள்தோரும் ஒவ்வொரு வாகனத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. தேர் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடிக்கும் நாளான 21 மற்றும் 22ம் தேதி ஆகிய இருதினங்களில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்ட சோமாஸ்கந்தர் எழுந்தருளிய பெரிய தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர், சிறிய தேரான ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் தேர் இழுக்கும் நிகழ்ச்சி இன்று காலை 10:17 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் தேர் வடத்தை பிடித்து நான்கு ரத வீதிகளில் இழுத்து வந்து இறைவனை வழிபட்டனர். முன்னதாக பக்தர்கள் தேரின் மீது ஏறி கருணாம்பிகை அம்மனை சிறப்பு அலங்காரத்தில் தரிசித்தனர். பல்வேறு சமூகத்தாரின் மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கருணாம்பிகை அம்மன் தேரின் பின்பு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர் தேரை குழந்தைகள் உற்சாகத்துடன் இழுத்து வந்து மகிழ்ந்தனர். அதன் தொடர்ச்சியாக சண்டிகேசுவரர் தேர் மற்றும் பூமி நீளா தேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் தேரும் திருவீதிகளில் பவனி வந்தது. கோவை சாலையில் உள்ள தேர் நிலையிலிருந்து புறப்பட்டு மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு ரத வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து நிறைவாக மீண்டும் கோவை சாலை வழியாக அம்மன் தேர் பிற்பகல் 01.40 மணிக்கு நிலை சேர்ந்தது. தேர் விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.