திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சி்த்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று மூலஸ்தானத்தை நோக்கி முதல்நாள் தேரோட்டம் துவங்கியது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.16 ல் காப்புக்கட்டி துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை அலங்காரங்களில் வெள்ளிக்கேடகத்தில் அம்பாள் புறப்பாடும், இரவில் வாகனங்களில் அம்மன் திருவீதிஉலாவும் நடந்தது. இன்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு மகா கணபதி, மாணிக்கநாச்சி , அம்பாள் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். பின்னர் பக்தர்கள் தொடர்ந்து கணபதிக்கும், அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மாலையில் பெண்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை கிடத்தி கோயில் குளத்தையும், தேரையும் வலம் வந்து தங்கள் குழந்தைக்கு தொட்டில் கட்டும் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து தேர்வடம் பிடித்து தெற்குபட்டு மூலஸ்தானம் நோக்கி தேர் புறப்பட்டது. தெற்குப்பட்டில் தேர் நிலைநிறுத்தப்பட்டது. நாளை காலை 9:00 மணிக்கு மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடைபெறும். மாலையில் 6:00 மணி அளவில் தேர் வடம் பிடிக்கப்பட்டு மீண்டும் கோயில் வந்தடையும். தொடர்ந்து இரவில் 7:00 மணிக்கு பன்னீர் திருவிழா நடைபெறும். நாளை மறுநாள் காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி, மஞ்சுவிரட்டும், இரவு 10:30 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் பவனியுடன் விழா நிறைவடையும்.