பதிவு செய்த நாள்
01
மே
2024
04:05
தொண்டாமுத்தூர்; கம்போடியா நாட்டிற்கு ஆன்மிக பயணமாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, தென்கிழக்கு ஆசியாவின் ஆன்மீக அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக, 10 நாள் ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, கம்போடியா நாட்டிற்கு சென்ற சத்குருவை, அந்நாட்டின் பிரதமர் ஹன் மானெட் சத்குருவை வரவேற்று வாழ்த்தி எழுதிய கடிதத்தை, அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் சோக் சோகன், சத்குருவை வரவேற்று, கடிதத்தை வழங்கினார். தொடர்ந்து, சத்குரு, கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் போன்ற வரலாற்று மற்றும் தொல்லியல் இடங்களுக்கு சென்று, அதன் கலாச்சாரம் ஆன்மிக மற்றும் அறிவியல் அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கம்போடியா நாட்டு பிரதமர், சத்குருவிற்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கம்போடியா நாட்டு மக்கள் மற்றும் என்னுடைய சார்பில், சத்குருவை சியம் ரீப் நகரத்திற்கு அன்போடு வரவேற்பதோடு, இங்கு நீங்கள் தங்கும் நாட்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். மேலும் உங்களின் தியான நிகழ்ச்சிக்கு, அங்கோர் தொல்லியல் பூங்காவை நீங்கள் தேர்ந்தெடுத்தது மூலம் நாங்கள் கவுரவிக்கப்பட்டுள்ளோம். தாங்கள் இங்கு இருக்கும் காலம் அமைதியால் குறிக்கப்படட்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: கம்போடியாவின் பிரதம மந்திரி ஹன் மானெட், தங்களின் அழைப்பு கடிதத்திற்கும், வரவேற்பிற்கும் நன்றி. இந்த தேசத்தின் நினைவு சின்னங்களும், கலாச்சாரமும், மனித புத்தி கூர்மைக்கும், உறுதிக்குமான ஒரு பிரமிக்க வைக்கும் அஞ்சலியாக உள்ளது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.