ஒடுக்கம்பட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 04:05
நத்தம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி ஒடுகம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி முன்னதாக நேற்று முதல் நாள் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு முதல் காலயாக பூஜைகள் நடந்தது.தொடர்ந்து இன்று யாகசாலையில் இரண்டாம் கால பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கங்கை, காவேரி, கரந்தமலை அழகர்மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் கோவிலை சுற்றி நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு புனித தீர்த்தமும் பூஜை மலர்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்த விழாவையொட்டி மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.விழா ஏற்பாடுகளை ஒடுகம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.