திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் விசாக திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2024 09:05
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக வசந்த உற்ஸவம் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. நேற்று மாலை உற்ஸவர்கள் சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனை முடிந்து காப்பு கட்டப்பட்டது. இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டப ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடந்தது. இந்த உற்ஸவம் மே 21வரை நடக்கும். மே 22 பால்குட திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 6:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். பக்தர்கள் கொண்டு வரும் பாலால் மதியம் 2:00 மணி வரை தொடர்ந்து அபிஷேகம் செய்யப்படும். மே 23 காலையில் உற்ஸவர் சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளுவர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் சுவாமி கோயிலுக்கு திரும்புவார்.