பதிவு செய்த நாள்
17
மே
2024
02:05
ஆன்மிகத்தில் மீனுக்கு சிறப்பான இடம் உள்ளது. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமும் ஒன்றாகும். கர்நாடகாவின் கோவில் ஒன்றில், மீன்களே கடவுளாக கருதப்படுகின்றன. கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் சிசிலேஸ்வராவும் ஒன்றாகும். தட்சிணகன்னடா பெல்தங்கடியின் சிசிலா என்ற இயற்கை எழில் நிறைந்த கிராமத்தில் இந்த புண்ணிய தலம் உள்ளது. கோவிலில் பல சிறப்புகள் உள்ளன. இந்த புண்ணிய தலத்தின் கடவுளாக மீன் போற்றப்படுகிறது. கபிலா ஆற்றங்கரை குக்கே சுப்ரமண்யா -- தர்மஸ்தலா இடையே இணைப்பு ஏற்படுத்தும் சாலையின் நடுவில், சிசிலேஸ்வரா புண்ணிய தலம் உள்ளது. இயற்கை காட்சிகள் நிறைந்த அற்புதமான இடத்தில், சிசிலேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இங்கு, சிசிலேஸ்வர சுவாமி குடி கொண்டுள்ளார். கபிலா ஆற்றங்கரையில் உள்ள புண்ணிய தலம், ஆற்றில் துள்ளி விளையாடும் மீன்கள் பக்தர்கள் கவனத்தை ஈர்க்கும்.
பெரோல் என்ற வகையை சேர்ந்த மீன்களை, மஹாஷிர் என்றும் அழைக்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களும், உள்ளூர் மக்களும் இந்த மீன்களை கடவுள் மீன்கள் என, நம்புகின்றனர். முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர், கபிலா ஆற்றின் அருகே குமாரகிரியில் இருந்த லிங்கத்துக்கு தினமும் அபிஷேகம் செய்து, பூஜித்து விட்டு திரும்பி செல்வார். ஒருநாள் வழக்கம் போன்று, பூஜை முடிந்து, திரும்பும் போது கால் தவறி விழுந்து காயமடைந்தார். அப்போது அவர் கபிலா ஆற்றங்கரையில் நிலை நிற்கும்படி, கடவுளிடம் வேண்டினார்.
ரத்தம் நின்றது; நிலை நின்றால் இதே நீரில் அபிஷேகம் செய்வதாக பிரார்த்தித்தார். சில நாட்களில் கபிலா ஆற்றங்கரையில், ஒரு கல் சுயம்புவாக தோன்றியது. இதை பார்த்த ஆதிவாசிகள், காட்டில் கிடைக்கும் மிளகை கல்லில் வைத்து அரைத்தனர். அப்போது கல்லில் இருந்து ரத்தம் ஒழுக துவங்கியது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த அப்பகுதியினர், கல்லில் சிசிலேஸ்வர சுவாமி குடிகொள்ள வேண்டும் என, பிரார்த்தனை செய்த போது, ரத்தம் ஒழுகுவது நின்றதாம். அதன்பின் இங்கு கோவில் கட்டப்பட்டது. சிசிலேஸ்வரா சுவாமிக்கு, அனைத்து விதமான அபிஷேகங்கள், நைவேத்தியங்கள் கபிலா ஆற்றின் நீரிலேயே செய்யப்படுகின்றன. எனவே, நீர் எப்போதும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதால், விஷ்ணு மச்ச வடிவில் ஆற்றில் குடி கொண்டதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆற்றில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் துள்ளி விளையாடுவதை பார்க்கும் போது, மனதில் மகிழ்ச்சி பொங்கும். மீன்களுக்கு ஒரு பிடி அரிசி அல்லது பொரி போட்டால், சரும நோய் உட்பட அனைத்து விதமான நோய்களும் குணமாகும் என்பது ஐதீகம். ஆண்டுக்கு ஒரு முறை, கோவிலில் திருவிழா நடத்தப்படுகிறது. சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் திருவிழாவுக்கு வருகின்றனர். இந்த கோவில், பெல்தங்கடியிலிருந்து 44 கி.மீ., துாரத்தில் உள்ளது. பெங்களூரிலிருந்து ரயிலில் செல்வோர், பன்ட்வாலில் இறங்கி, அங்கிருந்து 66 கி.மீ., பயணித்து கோவிலை அடையலாம். இந்த கோவில் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மதியம் 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.
- நமது நிருபர் -