மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி அம்பாளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி அமைத்து வரவேற்றனர்.
திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத திருவிழா மே 12 வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. மே 14 முதல் மே 16 வரை சுவாமி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாங்கொட்டை திருவிழாவிற்கு இன்று (17 ம்தேதி) திருவாதவூரில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் திருமறைநாதர் மேலுாருக்கு எழுந்தருளினார். வழி நெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி அமைத்து சுவாமிகளை வரவேற்றனர். மேலுார் நுழை வாயிலில் தாசில்தார் முத்துபாண்டியனுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. பகல் முழுவதும் மேலுாரில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த திருமறைநாதர் நாளை அதிகாலை மேலுாரில் இருந்து மீண்டும் திருவாதவூர் கோயிலுக்கு புறப்பட்டார். மே 20 ல் திருக்கல்யாணமும், மே 21 ல் தோரோட்டமும், மே 22 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் சீனிவாசன், ருக்மணி, துணை ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் யக்ஞநாராயணன், பேஷ்கார் பிரபு செய்திருந்தனர்.