பதிவு செய்த நாள்
20
மே
2024
04:05
திருத்தணி: திருத்தணி அடுத்த மேல்திருத்தணி திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த, 2ம்தேதி கொடியேற்றத்துடன் தீமிதி விழா துவங்கியது. இதையொட்டி, தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், நடந்து வந்தது. கடந்த 8ம் தேதி திரவுபதியம்மன் திருமணம், 10ல் சுபத்திரை திருமணம், 14ல் அர்ஜுனன் தபசு நடந்தது. நேற்று காலை, 9:45 மணியளவில் கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர். மாலை, 6:00 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இரவு, வாணவேடிக்கை மற்றும் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல் குடிகுண்டா மற்றும் பட்டாபிராமபுரம் ஆகிய கிராமங்களில் நடந்த தீமிதி விழாவில் நேற்று காலை, 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:30 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். மூன்று கோவில்களிலும் இன்று காலை 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. l ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் கிராமத்தின் வடகிழக்கில், திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 10ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், அர்ஜுனன் வில் வளைப்பு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், அர்ஜுனன் தபசு, சக்தி கரகம் ஊர்வலம் என பல்வேறு சிறப்பு உற்சவங்கள் நடந்து வந்தன. நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.