பதிவு செய்த நாள்
23
மே
2024
11:05
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, கோதவாடியில் உள்ள மாரியம்மன் கோவில் முன்மண்டபம் சேதம் அடைந்துள்ளது.
கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில், 102 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் செய்து, 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த கோவில், கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்ததால், கோவில் முன் மண்டபத்தின் மேற்பகுதி சேதம் அடைய துவங்கியது. கடந்த ஆண்டு பெய்த மழையில், மண்டபத்தின் தூண்கள் சரிந்த நிலையில் இருந்தது. மண்டபத்தின் ஓடுகள், விட்டம் சேதம் அடைந்திருந்தது. இதை தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் ஊர் பொதுமக்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து சென்றனர். அதன்பின், தொல்லியல் துறையில் இருந்து அறிக்கை வந்த பின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். தற்போது வரை, கோவில் புனரமைக்க நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால், இரவு நேரத்தில் கோவில் மண்டபத்தின் ஒரு பகுதியில் இருந்த ஓடுகள் சரிந்து விழுந்தது. அப்பகுதி மக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கோவிலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த, 20 நாட்களுக்கு முன் கோவிலை ஆய்வு செய்தோம். நலிவடைந்த கோவிலாக சேர்க்கப்பட்டு அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளோம். இதன் வாயிலாக, கோவில் வளர்ச்சி பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு நிதி கிடைக்கும். இன்னும் ஒரு சில தினங்களில் முன்மண்டபம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.