விருத்தாசலம்; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு நடந்தது. முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாளை முன்னிட்டு, விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று காலை சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றி சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல், சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். இதேபோல், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர், கண்டியங்குப்பம் வெண்மலையப்பர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், மாவிளக்கு, நெய் விளக்கு தீபமேற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.