பதிவு செய்த நாள்
23
மே
2024
11:05
திருக்கனுார்; வம்புப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் சிவன், பார்வதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் செடல் உற்சவம் கடந்த 20ம் தேதி ஐயனாரப்பன் கோயிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் (21ம் தேதி) காலை 9:00 மணிக்கு முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சிவன்– பார்வதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன்பெற வேண்டி, வித்தியாசமான முறையில் பழ வகைகளுக்கு பதிலாக விவசாயிகள் மூலம் நேரடியாக கிடைக்கக் கூடிய தேங்காய், மாங்காய், எலுமிச்சம், கொய்யா, நெல்கதிர், பனங்காய்(நுங்கு), வாழைக்காய், நார்த்தங்காய், பப்பாளிக்காய், ஈச்சங்காய் உள்ளிட்டவை சீர்வரிசை தட்டில் வைக்கப்பட்டிருந்தன. இதில், வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று( 22ம் தேதி) மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், இன்று (23ம் தேதி) ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், நாளை (24ம் தேதி) செடல் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.