பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் 100 நாட்கள் நடந்த கோடி அர்ச்சனை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2024 10:05
பிள்ளையார்பட்டி; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி 100 நாட்கள் நடந்த கோடி அர்ச்சனைப் பெருவிழா நிறைவடைந்தது.
நகரத்தார் நவ கோயில்களி்ல ஒன்றான கற்பகவிநாயகர் கோயிலில் சிறப்பு விழாக்களாக கற்பகவிநாயகருக்கு 1008 கலசாபிேஷகம், அதிருத்ர மகாயாகம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது முதன் முறையாக உலக சகல உயிரினஙகள் நன்மை வேண்டி கோடி அர்ச்சனைப் பெருவிழா கடந்த 100 நாட்களாக நடத்தப்பட்டது. பிப்.11ல் துவங்கி தினசரி காலை, மாலைகளில் லட்சார்ச்சனை 100 நாட்கள் நடைபெற்றது. தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தரம் குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் அர்ச்சனை நடந்தது. நேற்று நிறைவுநாளை முன்னிட்டு மூலவர்கள் சன்னதி எதிர் மண்டபத்தில் அஸ்திரத் தேவர், கற்பகவிநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய கற்பகவிநாயகருக்கு காலை 7:45 மணி முதல் அர்ச்சனை துவங்கியது. நடப்புக் காரியகாரர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் முன்னிலை வகித்தனர். மீண்டும் மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு மீண்டும் அர்ச்சனை துவங்கி இரவு 9:00 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் உற்ஸவர் பிரகாரம் வலம் வந்தார். கடந்த 100நாட்களாக நடந்த கோடி அர்ச்சனையில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.