பதிவு செய்த நாள்
24
மே
2024
01:05
தனக்குப் பின் தலைமை தாங்குவதற்குத் தகுதியானவராக, அடுத்தவரைத் தயார்படுத்துவதே உண்மையான தலைவருக்கு அழகு. இது ஒரு சத்தானச் சித்தாந்தம். இதனைப் பயன்படுத்தாத நிறுவனங்கள், குறு வனங்களாகக் குலைந்து போன சம்பவங்கள் ஏராளம். அரசியல் கட்சிகள் கூட இந்த சித்தாந்தத்தில் இருந்து விடுபட்டு விடவில்லை. "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா" என்ற ராஜாஜியின் பாடலைப் பாடி, ஐ.நா சபை வரை புகழ் பெற்றவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவர் எங்கு பாட்டுக் கச்சேரி நடத்தினாலும், அவருடன் ஓரிருவர் அமர்ந்து, சேர்ந்து பாடுவது வழக்கம். அப்படிப் பாடியவர்களில் ஒருவர் கூட எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பிறகோ, அவரின் காலத்திலோ தனிப்பட்ட முறையில் சோபிக்கவே இல்லை.
எம் எஸ் சுப்புலட்சுமியின் உடனிருந்து பாடியவர் ராதா விஸ்வநாதன். இவர் மிகச் சிறந்தப் பாடகி. ஆனாலும், தனிப்பட்ட முறையில் தன் திறமை அளவுக்கான புகழ் ஏணியை அவரால் எட்டவே முடியாமல் போனது. திமுக மாநாடு நடத்திய போது, "தம்பி வா...தலைமை ஏற்க வா! " என்று அண்ணாதுரையை அழைத்தது என்பது இந்த கோட்பாட்டின் பண்பாடு. காஞ்சி மடத்திலும் இந்த குறிக்கோளை எய்துவதற்கான அணுகுமுறைகளை அழகுறக் காண முடியும். காஞ்சி மடத்தில் பரமாச்சாரியாரும், ஜெயேந்திர சுவாமிகளும் இருக்கும் காலகட்டத்தில் ஏராளமான மெய்யன்பர்கள் திரண்டு வருவர். அவர்களில் பெரும்பாலானோர் பரமாச்சாரியாரைப் பார்த்துத் தரிசனம் செய்துவிட்டு, பிரசாதமும், தீர்த்தமும் பெற்றுக்கொண்டு போய் விடுவார்கள். அவர்களெல்லாம் ஜெயேந்திர சுவாமியைப் பார்க்கக் கூடப் போக மாட்டார்கள். இதனால் பரமாச்சாரியாருக்கு மட்டும் திரளான பக்தர்கள் கூட்டம் இருக்க, ஜெயேந்திர சுவாமிகளுக்கான பக்தகோடிகளின் கூட்டம் குன்றியே தோன்றியது. இதனைப் பரமாச்சாரியார் கவனித்துக் கொண்டே வந்தார். "தன்னைத் தரிசித்து விட்டுச் செல்கின்ற பக்தர்கள், ஜெயேந்திர சுவாமிகளையும் தரிசனம் செய்ய வேண்டும்" என்று பரமாச்சாரியார் விழைவு கொண்டிருந்தார். அதற்கான ஒரு உபாயத்தை அவரே உண்டு பண்ணினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, தன்னைத் தரிசிக்க வந்த பக்தர்களுக்குப் பரமாச்சாரியார் தரிசனம் கொடுத்தார், ஆசி வழங்கினார். ஆனால் பிரசாதத்தையோ, தீர்த்தத்தையோ கொடுக்கவில்லை. பக்தர்கள் பெரியவாளிடம் வாய்விட்டே இது குறித்துக் கேட்டு விட்டார்கள். பரமாச்சாரியாரோ, "பிரசாதம், தீர்த்தம் வேண்டுமானால் சின்ன பெரியவாவைப் போய்ப் பாருங்கள்" என்று கூறிவிட்டார்.
பரமாச்சாரியாரை மட்டும் தரிசித்துக் கொண்டிருந்த பக்தர்கள், இதன் பின்னர் தான் ஜெயேந்திர சுவாமிகளையும் தரிசிப்பது என்று வந்தனர். பின்தான் சின்னவரின் ஆளுமை மேலோங்கத் தொடங்கியது. இவ்வாறாகத் தனக்குப் பின்னால் தான் வகிக்கின்ற தலைமைத் தகுதியை ஏற்றுத் தேற்றுவதற்குத் தோதாக, ஜெயேந்திர சுவாமியைப் பரமாச்சாரியார் தன்னுடைய மதிநுட்பம் மூலமாக ஏற்பாடுகளைச் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது. தான் இருக்கும்போதே தன் தலைமைத் தகுதியை ஏற்று நிர்வகிப்பதற்கான ஆற்றலைத் தோற்றுவித்துக் கொள்வதற்காக, ஜெயேந்திர சுவாமிகளுக்குப் பரமாச்சாரியார் வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தலைவர், தனக்குப் பிறகு தலைமை தாங்கக் கூடிய தகுதியோடு இருக்குமாறு மற்றொருவரை உருவாக்கினால் தான் நிறுவன நிர்வாகம் நேர்த்தியாக இருக்கும். இல்லையேல் அது வர்த்தக நிறுவனமாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி... தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற வகையில், தடாலடி வேலைகள் நடக்கும். கட்சிகள் கூறு போடப்படும். நிறுவனங்கள் துண்டு துண்டாகிப் போகும். காஞ்சி மடத்துப் பரமாச்சாரியாரும், காஞ்சிபுரத்து அண்ணாதுறையும் ஒரே மாதிரியான கோட்பாட்டுக் கொண்றவர்களாக இருப்பது வரலாற்று வசந்தம். ஆங்கில இலக்கிய மாமன்னன் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற பொன்மொழி ஒன்று உண்டு. அந்த பொன்மொழிக்கு இந்த இருவருமே பொருந்தி வரக்கூடியவர்கள். அந்தப் பொன்மொழி இதுதான், "Great men think alike" "சான்றோர்கள் ஒரே கோணத்தில் சிந்திப்பார்கள்" என்பதே இதன் பொருளாகும். பரமாச்சாரியாரின் பிறந்த நாளான இன்று (மே 24) அவரின் பெருந்தன்மையைப் போற்றுகின்ற வகையில் இந்த தகவலைப் பதிவிடுகிறேன்.
-ஆர் நூருல்லா, ஊடகவியலாளர். 9655578786