பிறரை துன்புறுத்தி செய்யும் காரியம் இன்பத்தை தராது; திருச்சி கல்யாணராமன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2024 10:06
பிறரை துன்புறுத்தி செய்யும் காரியம் இன்பத்தை தராது என்று ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார். மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரி அரங்கில் நடைபெற்று வருகிறது.
சீதையை தேடல் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது; கலியுகத்தில் இறை சிந்தனை குறைவாக இருக்கிறது. பாரதி நன்றிது தேர்ந்திட வேண்டும் என்கிறார் நல்லவனாக வாழ நற்காரியங்களை செய்ய வேண்டும். பிறரை துன்புறுத்தி நாம் ஒரு காரியம் செய்யக்கூடாது. மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை மூன்றில் உலகமே அடங்கி இருக்கிறது. மூன்றையும் தவிர்க்க வேண்டும். பிறர் இஷ்டப்படாத காரியத்தை நாம் செய்யக்கூடாது. பணபலம் அதிகாரம் இருக்கிறது என்று பிறருக்கு எந்த விஷயத்திலும் கெடுதல் செய்யக்கூடாது. பிறரை துன்புறுத்தி செய்யும் காரியம் இன்பத்தை தராது. இறைவனை எப்போதும் தியானம் செய்ய வேண்டும் .
இதை அனுமனிடம் கற்றுக் கொள்ள வேண்டும். நல்லதையே ஒவ்வொருவரும் பேச வேண்டும் என்றால் பகவன் நாமாவை சொல்ல வேண்டும். சாப்பிடும் போது நாம் குறை சொல்லக்கூடாது அது அக்னி கர்மா. யாராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பினால் செய்ய வேண்டும். அதிகார பலத்தால் செய்தால் ராவணன். வாலி. இரணிய கசிபு ஆகியோரைப் போல நிம்மதி இல்லாமல் வாழ்வார்கள். பிறர் மனம் கோணாமல் வாழ்பவன் தான் உத்தமன். விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையை ராமனிடம் கற்றுக் கொள்ள வேண்டும். செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் கஷ்டம் என்கிறார் திருவள்ளுவர் எதையும் கடமையாய் செய்தால் பிரியம் தானாக வரும் என்கிறது கீதை .ஒரு காரியத்தை நான் தான் செய்தேன் என்று சொல்லக்கூடாது.அனுமன் தொண்டு செய்த போது ராமனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. எப்பொழுதும் வறட்டு வேதாந்தம் கூடாது. வள்ளுவர் செல்வத்தை நிலையாமை பகுதியில் எழுதுகிறார். கூத்து நடக்கும் போது ஒவ்வொருவரும் தனித்தனியாக வருவார் போகும்போது மொத்தமாக சென்று விடுவர் அதுபோல செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக வரும். போகும்போது மொத்தமாக போய்விடும் என்கிறார் . ஒவ்வொருவரும் ராம நாமாவை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ராம நாம ஜெபித்தால் கஷ்டம் வராது. நேரமில்லை என்று சொல்கிறவன் பக்தனே இல்லை கடவுள் இல்லை என்று சொல்கிறவனை விட மோசமானவன் அவன்.
ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் ராமன் கிருபையால் தான் அது நடக்கிறது என்று எண்ண வேண்டும். இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். சொற்பொழிவு வருகிற 16-ஆம் தேதி வரை மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.