பதிவு செய்த நாள்
11
ஜூன்
2024
11:06
ஷிவமொகா மாவட்டம், ஷிகாரிபுரா தாலுகா, பல்லிகாவி என்ற ஊரில் கேதாரேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. சாளுக்கிய மன்னர்கள் ஆட்சி காலத்தில், 11 – 12ம் நுாற்றாண்டில் கல்வி மையமாக திகழ்ந்த பல்லிகாவி முக்கிய நகரமாக இருந்தது. அவர்களின் பழமையான தலைநகராகவும் விளங்கியது. இந்த கோவில், 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஹொய்சாலர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். சலவை கற்களை பயன்படுத்தி, கோவில் கட்டப்பட்டுள்ளது. பின்னர், மேற்கத்திய சாளுக்கிய மன்னர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று சன்னிதிகள்: சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. கோவிலின் மேற்கு, தெற்கு பகுதியில் சிவலிங்கம் போன்ற தோற்றம் வரையப்பட்டுள்ளது. மூன்று சன்னிதிகள் உள்ளன. மேற்கு கோவிலில் சபை மண்டபமும்; மற்ற இரண்டு சன்னிதிகளில் பாதி மண்டபமும் மட்டுமே காணப்படுகின்றன. சபை மண்டபத்தில் நடுவில், கருவறை பார்த்தவாறு பெரிய நந்தி விக்ரஹம் பார்ப்பதற்கே பிரமாண்டமாக இருக்கிறது. கோவில் வெளிப்புறம், அலங்கார கோபுரங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் மீது அலங்கார கோபுரம் உள்ளது. ஆங்காங்கே சுவாமிகளின் வெவ்வேறு உருவ சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், ஹொய்சாலர்களின் சின்னம் பெரிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் துறை: மூன்று சன்னிதிகளின் கோபுரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படுகின்றன. புராதன சின்னங்கள் இருப்பதால், தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது. கோவிலை சுற்றி பசுமை நிறைந்த புற்களால் காட்சி அளிக்கிறது. இங்கு வரும் பக்தர்கள், பக்தி பரவசமடைந்து தியானத்தில் அமர்ந்து விடுகின்றனர். ஷிகாரிபுராவில் உள்ள பிரசித்தி பெற்ற புராதன கோவில்களில், ஒன்றாக திகழ்கிறது. ஷிவமொகா நகரில் இருந்து, 73.2 கி.மீ., துாரத்திலும்; ஷிகாரிபுராவில் இருந்து, 21.6 கி.மீ., துாரத்திலும் கேதாரேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. ஷிகாரிபுராவில் இருந்து பஸ், டாக்சி, சொந்த வாகனங்களில் செல்லலாம்.
பரவசம்: கட்டட கலை, சிற்பகலையை பார்ப்பதற்கு என்றே பலரும் வருவதுண்டு. கோவிலுக்குள் நுழைந்த உடன், ஒரு விதமான பரவசம் ஏற்படுவதை உணரலாம் என்று சென்று வந்த பக்தர்கள் கூறுகின்றனர். பழமை மாறாமல் இருப்பதால், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தவிர சிவனுக்கு உகந்த விழா நாட்களிலும் பக்தர்கள் வருவதுண்டு. புராதன சின்னம் என்பதால், வார நாட்களில், மாணவர்கள், சுற்றுலா பயணியரும் வருகின்றனர்.