குன்னூர்; குன்னூர் அந்தோணியார் திருத்தல 138வது ஆண்டு திருவிழாவில், இஸ்ரோ விண்கலம் அலங்காரத்தில் அந்தோனியார் பவனி வந்தார்.
குன்னுாரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், துவங்கிய நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிறந்த தினமும் திருப்பலி, ஆராதனைகள் நடந்தன. நேற்று திருவிழா ஆடம்பர திருப்பலி மைசூர் பிஷப் வில்லியம் தலைமையிலும் மலையாளத்தில் திருப்பலி குன்னூர் செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை சேவியர் பாபு தலைமையிலும் நடந்தது. மதியம் அன்பின் விருந்து நடந்தது. தொடர்ந்து இஸ்ரோவின் விண்கலம் போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் பகனி வந்தார். இதில் பங்கு மக்கள் பிரார்த்தனைகள் செய்தும் பாடல்கள் பாடியும் பங்கேற்றனர். இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதரின் திரு சொரூபம் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டது. அந்தோணியார் திருத்தளத்தில் புறப்பட்ட ஊர்வலம் மவுண்ட் ரோடு பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் திருத்தலத்தை அடைந்தது. நற்கருணை ஆசீருடன் விழா நிறைவு பெற்றது. விழாவையொட்டி பலவண்ண விளக்கு அலங்காரங்களில் திருத்தலம் வண்ணமயமாக காட்சியளித்தது. மவுண்ட் ரோடு பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் உட்பட பல பகுதிகளிலும் அந்தோணியார் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள், இளையோர் குழுவினர், அன்பின் விருந்து குழுவினர், பங்கு மக்கள் செய்திருந்தனர்.