பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆனி சுவாதி நட்சத்திர விழாவில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.
பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பரமஸ்வாமி மூலவராக வீற்றிருக்கிறார். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று காலை ஆனி சுவாதி நட்சத்திர விழா நடந்தது. அப்போது சுந்தரராஜ பெருமாள் பரம பதநாதனாக அமர்ந்த திருக்கோலத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் எழுந்தருளினார். காலை 11:00 மணிக்கு அலங்கார தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு வீதி உலா வந்தார். பின்னர் வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பாகவதர்கள் பிரபந்தங்கள், பஜனை பாடல்கள் பாடியபடி பெருமாள் கோயிலை அடைந்தார்.